Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்.


தருமபுரி, ஆகஸ்ட் 22 (ஆவணி 6):


தருமபுரி வனக்கோட்டத்தின் ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளைச் சுற்றியுள்ள வனங்களில் அரிய மர இனங்களும், பல்வேறு விலங்கு இனங்களும் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி உள்ளிட்ட மரவகைகள் அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், மயில்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளும், பல அரிய பறவை இனங்களும் இங்கு வாழ்கின்றன.


இந்த உயிரினங்களை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில், வனத்துறையினர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சிலர் உரிமம் பெறாமல் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் திரு. கா. இராஜாங்கம், இ.வ.ப., அவர்கள் செய்தியளித்ததாவது: “கிராமங்களில் யாரேனும் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களிடமோ, காவல்துறை அலுவலர்களிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது எந்தவித வனக்குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படமாட்டாது” என்று தெரிவித்தார்.

அதே சமயம், “நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காமல், உரிமம் பெறாமல் வைத்திருப்போர் மீது செப்டம்பர் 10-க்குப் பின் கடுமையான சோதனைகள் நடத்தப்படும். காவல்துறை மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் மலைக்கிராமங்கள், வனக்கிராமங்கள் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும். இச்சோதனைகளில் உரிமமில்லாத துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படின், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார். இந்த அறிவிப்பு வனவிலங்கு பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884