.jpg)
தருமபுரி, ஆக. 22 | ஆவணி 6 -
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் செயல்படுத்திய திட்டங்களில், ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு/மனைக்கான நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரயப்பத்திரம் (Sale Deed) பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு, வட்டி தள்ளுபடியில் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் வசதி அரசு வழங்கியுள்ளது. இந்த சலுகை, அரசு ஆணை (நிலை) எண்.116, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை (நி.எ.2–1), தேதி: 04.08.2025 வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், விருப்பாட்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி, அவ்வை நகர், வள்ளுவர் நகர், பாலக்கோடு, அரூர் ஆகிய திட்டங்களில் வீடு/மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், 31.03.2015-க்கு முன்பு தவணை காலம் முடிந்த நிலுவைத் தொகையை, வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாக செலுத்தி, 31.03.2026க்குள் கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், “ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி, விற்பனைப்பத்திரம் பெற்றுக்கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
.gif)
