தருமபுரி. ஆக 21 | ஆவணி 4 -
தருமபுரி, பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (21.08.2025 – ஆவணி 5) நடைபெற்றது.
நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது: “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி” என்ற நிகழ்ச்சி, 12ஆம் வகுப்பு தோல்வியுற்றோர்கள் அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்காக விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இம்முகாம் மூலம் மாணவர்கள் உயர்கல்வி அல்லது திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பெறுவதுடன், எதிர்கால கல்வி குறித்து விழிப்புணர்வும் பெறுகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மற்றும் இக்கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்கள், இடைநிறுத்தியவர்கள், தேர்ச்சி பெற்றோர் மற்றும் பெறாத மாணவர்களுக்கு தகுந்த கல்வி ஆலோசனை வழங்கி, 100% சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 167 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 17 மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 12 மாணவர்களுக்கு அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில், 6 மாணவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Spot Admission வழங்கப்பட்டது. மேலும், கல்வி உதவித்தொகை, “தமிழ்புதல்வன்”, “புதுமைப்பெண்” திட்டம் மற்றும் கல்விக்கடன் குறித்து பல்வேறு அரசு துறை அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் திருமதி. நா. இராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. ம. தீபா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஜோதிசந்திரா உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)