தருமபுரி-ஆகஸ்ட் 29| ஆவணி 13 -
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை அனுமதி பெற்று விநாயகர் சிலை நிறுவி பொதுமக்கள் வழிபாடுகள் செய்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளை முன்னிட்டு விநாயகர் சிலைகளை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம், தொப்பூர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையாக உள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வந்தனர். தருமபுரி மாவட்ட எல்லையில் தருமபுரி மாவட்ட காவல்துறையினரும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி தென்பெண்ணை ஆற்றில் பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள் வரும் வாகனங்களை போலீசார் கண்காணித்து ஆற்றுக்குள் அனுமதித்தனர் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தென்பெண்ணையாற்றில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி கரைத்தனர். பல பக்தர்கள் ஆற்றினுள் விநாயகர் சிலையை வைத்து தண்ணீர் பீச்சு அடித்து பக்தி பரவசமடைந்தனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டத்தைச் சார்ந்த சிலைகள் தென்பெண்ணை ஆற்றில் கரைத்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இரண்டு மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

