தருமபுரி, ஆக. 18 | ஆவணி 2 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.08.2025 – ஆவணி 2) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 432 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களில் சாலை, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா வழங்கல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான மனுக்களும் அளிக்கப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக அனுப்பி வைத்து, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியானவர்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் சிறப்பு நல உதவியும் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) சித்ரா க/பெ. கனகராஜ் வன்கொடுமையால் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரர் திரு. கே.சி. பிரவீனுக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. செம்மலை, ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)