பாலக்கோடு, ஆக. 19, (ஆவணி 3) –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதூர் மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலையை தனியார் சிலர் தகடு வைத்து மூடி வைத்துள்ளனர். இதனால், அந்தப்பகுதியில் பயணிக்கும் காய்கறி சரக்கு வாகனங்கள், கார்கள், பள்ளி வாகனங்கள், லாரிகள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தேசிய நெடுஞ்சாலையில் நேராக செல்ல முடியாமல், உயிரை பணயம் வைத்து எதிர்திசையில் பயணிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலையில் சரியான திசையில் வரும் வாகனங்களுக்கும் இதனால் ஆபத்து அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. புதிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே 100-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதுடன், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்திசையில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். "சர்வீஸ் சாலை அடைக்கப்பட்டதால் வேறு வழியின்றி எதிர்திசையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சர்வீஸ் சாலை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
.gif)

