சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் திரு. பகவந்த் மான், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நகர்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் அரூர் புனித அன்னாள் நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியிலும் இன்று திட்டம் தொடங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் இணைந்து உணவருந்தி திட்டத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 1-ம் முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு துவக்கப்பட்டது. 25.08.2023 அன்று ஊரக மற்றும் பேரூராட்சி அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 15.07.2024 முதல் கிராமப்புற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது (2025-26 கல்வியாண்டு) தருமபுரி மாவட்டத்தில் 1130 பள்ளிகளில் 45,987 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். புதிய கட்டமாக, நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தருமபுரியில் 2 நகர்புற உதவி பெறும் பள்ளிகளில் 297 மாணவர்களும் பயனடைய உள்ளனர்.
வாரந்தோறும் வழங்கப்படும் உணவு பட்டியல்:
திங்கள் – வெண் பொங்கல், காய்கறி சாம்பார்
செவ்வாய் – ரவா உப்புமா, காய்கறி சாம்பார்
புதன் – வெண் பொங்கல், காய்கறி சாம்பார்
வியாழன் – சேமியா உப்புமா, காய்கறி சாம்பார்
வெள்ளி – கோதுமை உப்புமா, காய்கறி சாம்பார்
இந்த திட்டத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை, அரூர் பேரூராட்சி தலைவர் திருமதி. இந்திராணி தனபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வேடம்மாள், மகளிர் திட்ட இயக்குநர் திருமதி. அ. லலிதா, சத்துணவு நேர்முக உதவியாளர் திருமதி. சுமதி, வட்டாட்சியர் திரு. பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.