தருமபுரி – ஆகஸ்ட் 28, 2025 (ஆவணி 12) -
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் வரும் செப்டம்பர் 01, 2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையும், செப்டம்பர் 02, 2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவையும் முன்னிட்டு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கவுள்ளன.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு “வாய்மையே வெல்லும்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்”, “காஞ்சித் தலைவன்”, “அண்ணாவின் தமிழ்வளம்” என்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு “எழுத்தாளராக அண்ணா”, “தமிழும் அண்ணாவும்”, “பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்”, “அண்ணாவின் மேடைத்தமிழ்” போன்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு “தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்”, “பெரியாரும் பெண் விடுதலையும்”, “வைக்கம் வீரர்”, “சுயமரியாதை இயக்கம்” என்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு “தன்மானப் பேரொளி”, “தெற்காசியாவின் சாக்ரடீஸ்”, “சமுதாய விஞ்ஞானி பெரியார்”, “தொண்டு செய்த பழுத்த பழம்” போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000 வழங்கப்படும்.
இந்தப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் வழியாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அனுப்பியுள்ள படிவத்தில் அனுமதி பெற்று பங்கேற்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள படிவத்தில் அனுமதி பெற்று பங்கேற்கலாம்.
இப்போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.