பாலக்கோடு, ஆகஸ்ட் 21 | ஆவணி 5 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்போது 665 மாணவ–மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலைப் பள்ளி செல்ல மாணவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும், இதனால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னதாகவே ரூ.2 லட்சம் கட்டணமாக தமிழக அரசுக்கு செலுத்தியதாகவும் தெரிவித்தனர். ஆனால் இதுவரை மேல்நிலைப் பள்ளி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த 17ம் தேதி தர்மபுரி வந்த முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்பும் வராததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சோமனஹள்ளி பகுதியில் மதுபானக் கடை மற்றும் கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால், மாணவிகள் பாதுகாப்பு சிக்கலுக்கு உள்ளாகி வருவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதை எந்த அதிகாரிகளும் கவனிக்காததால் பெற்றோர்கள் விரக்தியடைந்தனர்.
இதனையடுத்து, இன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, “மேல்நிலைப் பள்ளி வேண்டும், கூடுதல் கட்டிடம் வேண்டும், ஆசிரியர்கள் தேவை, மதுபானக் கடையை அகற்று” என கோஷங்கள் எழுப்பினர். தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர்.
.gif)

.jpg)