பென்னாகரம், ஆக 14 | ஆடி 29 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மனநல பாதிப்பால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு, அரசு வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பிற பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படாததால் குடும்பத்தினர் திண்டாட்டம் அனுபவித்து வருகின்றனர். பென்னாகரம் பகுதியை சேர்ந்த சிவசந்திரன் (மாற்றுத் திறனாளி) 1995 ஜூலை 31 அன்று அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 2010-ஆம் ஆண்டு பணி மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேராமல், நீண்ட நாள் மருத்துவ விடுப்பில் இருந்த அவர், மனநல பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் 2021-ஆம் ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
திருமணம் ஆகாத சிவசந்திரனை அவரது தம்பி சிவசுப்பிரமணியனின் குடும்பம் பராமரித்து வருகிறது. வருவாய் ஆதாரம் இல்லாததால், அவர்களின் வாழ்க்கை கடுமையான நெருக்கடியில் உள்ளது. பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறையினரிடம் மனு அளித்தும், ஓய்வூதியம் மற்றும் பிற பணப் பலன்கள் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக நியாயமான பணப் பலன்களை வழங்க வேண்டும் என குடும்பத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)