தருமபுரி. ஆக 19 | ஆவணி 3 –
கேரளா மற்றும் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக உபரி நீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை 78 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணி ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை உத்தரவு நீடித்து வருவதால், காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்சியர், காவிரி கரையோர மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் திட்டம், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, அதிக நீர்வரத்து ஏற்பட்டால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லோகநாதன், வட்டாட்சியர் சண்முகசுந்தரம், ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
.gif)

.jpg)