ஒகேனக்கல், ஆக 19 | ஆவணி 3 -
பென்னாகரம் அருகே ஒகேனக்கல் பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனதை நெகிழச் செய்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த முகாமில் சுற்றுவட்டார மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் உடனடியாக தீர்வு காணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அரண்மனைப் பள்ளத்தை சேர்ந்த மோகன் என்ற மாற்றுத்திறனாளி, தனது தாயாருடன் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய வந்தார். பிறவியிலிருந்தே நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை, வீல் சேர் வசதி இல்லாததால், பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர வைத்து, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது தோள்களில் தூக்கிச் சென்று முகாமில் தேவையான பிரிவிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு 18 வயதுக்குள் உள்ளோருக்கே ஆதார் சேவை வழங்க முடியும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திருத்தப் பணிகள் ஜக்கம்பட்டி முகாமில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அரசு பணியாளர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொண்டு, மோகனை அரசு வாகனத்தில் ஜக்கம்பட்டி முகாமிற்கு அழைத்து சென்று, அங்கே அவரது ஆதார் பெயர் திருத்தத்தை செய்து முடித்தனர். பின்னர், அதே அரசு வாகனத்தில் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கி வைத்தனர்.
மாற்றுத்திறனாளி ஒருவரின் தேவையை பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் காட்டிய இந்த மனிதநேயமான உதவி, முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
.gif)

.jpg)