தருமபுரி, ஜூலை 16| ஆனி 32 -
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் நபர்கள் நேரடியாக சந்தித்து, உரையாடி, பணியிட வாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் முழுமையாக இலவசமாக நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும் வேட்பாளர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணிக்கான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளன. பங்கேற்கும் நிறுவனங்கள் விற்பனையாளர், மார்க்கெட்டிங் நிர்வாகி, சூப்பர்வைசர், மேலாளர், கணினி ஆபரேட்டர், கணக்காளர், மெக்கானிக் போன்ற பணியிடங்களுக்கான ஆட்களைத் தேடி வருகின்றன. இந்த பணிகளுக்காக பள்ளிப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளை பெற்ற நபர்களே பங்கேற்கலாம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்களுக்கு ஏற்ற பணியிடங்களை பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.