நல்லம்பள்ளி, ஜூலை 26 | ஆடி 10 -
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ள பாளையம்புதூர் தொப்பூர் சுங்கசாவடி அருகேயுள்ள குறிஞ்சிநகர் பகுதியில் இருந்து நாராயணபுரம், தாதநாய்க்கன்பட்டி பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாகவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதும், பொதுமக்கள் வேலைகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயணிப்பதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், தற்போது இச்சாலையின் நிலைமை மிகவும் அவலமாக இருந்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மழைக்காலங்களில் இந்த சாலையில் நடக்க முடியாத நிலை காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கே செல்ல வழியில்லை என்றால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எவ்வாறு முன்னேற முடியும் என்பது கேள்வியாகிறது. குறிஞ்சிநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருசக்கர வாகனங்கள் இல்லாமல் வீடுகள் இருக்கவே முடியாது என்பதையும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இப்பகுதியில் சுங்கசாவடி இருப்பினும், அது மக்களுக்கு எவ்விதமான பயனையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. “மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடைக்காத நிலையில், சுங்கசாவடி இங்கு எதற்காக?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி, மக்களின் அன்றாட வாழ்வு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் சாலை புனரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கும் நடவடிக்கையை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)