தருமபுரி, ஜூலை 26 | ஆடி 10 -
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இன்று (26.07.2025 – ஆடி 10) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ. மணி (நாடாளுமன்ற உறுப்பினர்), திரு. ஜி.கே. மணி (பென்னாகரம்), திரு. ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), மற்றும் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன் (தருமபுரி) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
முகாமில் 2,071 வேலை நாடுநர்கள் பங்கேற்றதுடன், பெங்களுரு, சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 117 முன்னணி தொழில்துறைக் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 604 நபர்கள் வேலைக்கு தேர்வாகியுள்ளனர். இதில் முதல்நிலையாக 25 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்குடன் அரசு பல்வேறு பயிற்சிகள், வேலைவாய்ப்பு முகாம்கள், உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கப்போகின்றன. OLA மற்றும் AUTOMOTIVES நிறுவனங்களும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளன.”
மேலும், நெக்குந்தி பகுதியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கான ஆலை அமைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனங்களின் மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.
இதனுடன், வேலைவாய்ப்புத் துறையின் மூலம் இலவசமாக போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், புத்தகங்கள், மாதிரி தேர்வுகள், நூலகம் மற்றும் இணையவசதிகள் வழங்கப்படுகின்றன என்றும், இவற்றை இளைஞர்கள் பயன்படுத்தி தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்வதரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட திறன் மேம்பாட்டு மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரியாதை செலுத்தினார்.
.gif)

.jpg)