![]() |
Image Source : google.com |
தருமபுரி, ஜூலை 10 (ஆனி 26) –
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தவர்களுக்கு ஆண்டுதோறும் புனிதத் தலங்களுக்கு பயணச் செலவுக்காக நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், புத்த மதத்தினர் 50 பேர், சமண மதத்தினர் 50 பேர் மற்றும் சீக்கிய மதத்தினர் 20 பேர் என மொத்தம் 120 நபர்களுக்கு ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.12.00 இலட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
புத்த மதத்தவர்களுக்கான புனிதத்தலங்களில் பீகாரில் புத்தகயா, ராஜ்கிர், வைஷாலி, உத்தரபிரதேசத்தில் குசிநகர், வாரணாசியில் சாரநாத் கோவில், நேபாளத்தில் லும்பினி உள்ளிட்ட இடங்கள் அடங்கும். சமண மதத்தவர்களுக்காக ராஜஸ்தானில் தில்வாரா, ரணக்பூர், ஜெய்சால்மர், ஜார்கண்டில் சிக்கர்ஜி, குஜராத்தில் பாலிடனா, பீகாரில் பவபுரி, கர்நாடகாவில் சரவணபெலகோலா ஆகியவை உள்ளடங்குகின்றன. சீக்கிய மதத்தவர்களுக்கு பஞ்சாபில் அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், பீகாரில் தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப், மஹாராஷ்டிராவில் தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல குருத்வாராக்கள் பயணத்தலங்களாக உள்ளன.
01.07.2025 அன்று அல்லது அதன் பிறகு இந்த புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் மானியம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2025க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.