
பாப்பாரப்பட்டி, ஆடவை (ஆனி) 15-
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-ஆம் வார்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை மாநாடு பாரதிதாசன் தெருவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளராக ப. கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மு. சிலம்பரசன் முன்னிலை வகித்ததுடன், மாவட்டச் செயலாளர் ம. அருள் குமார் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பாப்பாரப்பட்டி பகுதியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிக்காக மினி ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது.
மேலும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும், வீட்டு மனை பட்டாக்கள் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உரிய பட்டா வழங்க வேண்டும், சின்னஏரி தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும், சமுதாயக்கூடம் முதல் சுப்பிரமணிய சிவா தெரு வரை உள்ள குறுகிய சாலையை அகலப்படுத்த வேண்டும், புதுப்பிக்கப்பட்ட பேரூராட்சி சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ப. கார்த்திக் கிளைச் செயலாளராகவும், ம. சந்தோஷ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்று கருத்துரைத்தனர்.