ஒகேனக்கல், ஆடவை (ஆனி) 15-
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக வினாடிக்கு 65,000 கன அடியிலிருந்து அதிகரித்து காணப்பட்ட காவிரி ஆற்றின் நீர்வரத்து, தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இன்று (30.06.2025) நிலவரப்படி, வினாடிக்கு 50,000 கன அடியாக நீர்வரத்து பதிவாகியுள்ளது.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா தளமான ஒகேனக்கலில் பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வனப்பகுதிகளின் கரையோரங்களில் யாரும் அனுமதியின்றி தண்ணீரில் இறங்குகிறார்களா என்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் மற்றும் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் ட்ரோன் கேமரா உதவியுடன் நேரில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன், காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். சுற்றுலா பயணிகள் எவ்வித பாதுகாப்பு மீறலுமின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.