தருமபுரி, ஜூன் 04-
தருமபுரி மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் புதிய வீடுகள் கட்டுதல், தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் கட்டிடங்களை விரிவாக்கம் செய்வதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிட அனுமதிகளை எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ஒற்றை சாளர முறை (https://onlineppa.tn.gov.in) இணையதளத்தை 02.10.2023 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது அனைத்து அனுமதிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்த இணையதளத்தின் மூலம் 2,500 சதுர அடி வரை உள்ள மனைப்பரப்பில், 3,500 சதுர அடி வரை தரை அல்லது முதல் மாடி கொண்ட குடியிருப்புகளுக்கு சுய சான்றிதழ் முறைப்படி அனுமதி வழங்கப்படுகிறது. 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு, மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குனர் (DTCP) மற்றும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஒப்புதலுடன் அனுமதி பெறப்பட வேண்டும்.
மேலும், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி பெற, மின்கம்பங்கள், குடிநீர் வசதி, சாலை மற்றும் திறந்தவெளி நிலங்கள் ஆகிய அடிப்படை வசதிகள் கிராம ஊராட்சி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு விதிகளை மீறி அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை அகற்றப்படுவதோடு, உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் கட்டுவதற்கும் கட்டாயமாக இணையதளம் வழியாக விண்ணப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். எனவே, பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோர் தவறாமல் இணையதளத்தின் வாயிலாக கட்டுமான அனுமதி பெற்ற பிறகே பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக