தருமபுரி, ஜூன் 18-
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட மற்றும் தொழில்முனைவராக உருவாகும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 25,354 நபர்களுக்கு தேசிய மற்றும் தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500-ஐ ரூ.2,000 ஆக உயர்த்தி 6,987 நபர்களுக்கு ரூ.243.12 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையாக 1,772 மாணவர்களுக்கு ரூ.92 லட்சம் அளிக்கப்பட்டது. 167 நபர்களுக்கு ரூ.40.99 லட்சம் வங்கி கடன் மானியம், 12 நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆவின் விற்பனை மைய உதவித்தொகை, 1,411 நபர்களுக்கு ரூ.7.32 கோடி வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருமண ஊக்கத்திட்டத்தின் கீழ் 30 நபர்களுக்கு ரூ.14.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் 139 நபர்களுக்கு ரூ.22.56 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.3.60 கோடி மதிப்பில் 385 பேருக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்கள், ரூ.70.02 லட்சத்தில் 67 பேருக்கு பிரத்யோக ஸ்கூட்டர்கள், ரூ.99.42 லட்சத்தில் 97 பேருக்கு பேட்டரி சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.
540 பேருக்கு செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு காரணமாக ரூ.73.39 லட்சம் மதிப்பில் செயலி கொண்ட செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.28.08 கோடி மதிப்பில் உணவூட்டு மற்றும் ஊதிய மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நலத்திட்டங்களை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் https://www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspx என்ற இணையதளத்திலோ, அருகிலுள்ள இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - 04342-230050 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக