தருமபுரி, ஜூலை 17:
தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தும் கூட்டம் மண்டல பொதுச் செயலாளர் மாது தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர் கிஷோர், மாநிலத் தலைவர் முருகன், மாநில பேரவை ஆலோசகர் சின்னத்தம்பி ஆகியோர் பங்கேற்று தொழிலாளர்களின் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குழந்தைகளுக்கான கல்வி நிதி, திருமண நிதி, பிரசவ நிதி, விபத்து மற்றும் மரண நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவித் தொகைகள் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், அவற்றை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர். மேலும், மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,200-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்துதல், கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
அதேபோல், மீன்பிடித் தடை கால நிவாரணத்தை ரூ.8,000-லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்துதல், சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எளிய கடன் வசதி ஏற்படுத்துதல், நீண்டகாலமாக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு வீடு கட்ட ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
.gif)

.jpg)