பாலக்கோடு, ஜூலை 17:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள எம்.ஜி. ரோடு, கடைவீதி, தருமபுரி சாலை, ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஅள்ளி மேம்பாலம் வரை சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள், வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள் செயல்படுவதாலும், ஆட்டோக்கள், மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாலக்கோடு பேருந்து நிலையம் வழியாக ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூரு, சென்னை, தருமபுரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதாலும், பேருந்து நிலைய வளைவு பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாலும் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் எம்.ஜி. ரோடு மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள் கூட சிரமத்துடன் நடந்து செல்லும் சூழல் நிலவுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)