பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 10-
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள உங்கரானஅள்ளி ஊராட்சி பகுதிகள் கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றன.
தருமபுரி – A கொல்ல – அள்ளி வழியாக முக்கல்நாயக்கம்பட்டி வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 40 மற்றும் 47 என்ற இரு பஸ்கள் நாளொன்றுக்கு 11 முறை இயக்கப்பட்டன. ஆனால் பல போராட்டங்களுக்குப் பிறகும், தற்போது 40 என்ற பஸ் மட்டும் தினம் இருமுறை மட்டுமே இயக்கப்படுவது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ வசதிக்காக நகரம் செல்லும் முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், கீழ்காணும் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளன:
-
உங்கரானஅள்ளி, ஏமக்குட்டியூர், எட்டிமாரத்துப்பட்டி, உத்தனூர், த.குளியனூர் ஆகிய கிராமங்களின் அங்கன்வாடி மையங்கள்
-
உத்தனூர் கிராம பொது நூலக கட்டிடம்
சந்தனூர் சுடுகாடு செல்லும் பாதை மிக மோசமான நிலையில் உள்ளது. மக்கள் அங்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அதேபோல், ஏமக்குட்டியூர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டி கடுமையாக பழுதடைந்த நிலையில் அபாயகரமாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் கட்டப்பட்ட நான்கு மேல்நிலை நீர் தொட்டிகளும் இன்று வரை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. இதில் பைப் லைன் இணைப்பு செய்யப்படாமல், குடிநீர் வசதி வழங்கப்படாமல் காணப்படுகிறது.
பொது மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார்களை அளித்தும், நேரில் பார்வையிடுமாறு கோரியுள்ளும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், “நாங்கள் கனவு காணுகிறோமா, அல்லது அரசு விழிப்பதற்காக இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் மக்கள் வாழ்வாதாரத்திற்கே நேரடியான தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சனைகள் என்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வுகள் வழங்க வேண்டும் என்பதே பகுதி மக்களின் வலியுறுத்தப்பட்ட கோரிக்கையாகும்.
.gif)

.jpeg)