பாலக்கோடு நகரில் போக்குவரத்து நெரிசல் தீவிரம் - மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

பாலக்கோடு நகரில் போக்குவரத்து நெரிசல் தீவிரம் - மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


பாலக்கோடு, ஜூன் 07-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலையில், நகரத்தில் இயங்கும் வணிகக் கடைகள் முன்பு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஓசூர், பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி இயக்கப்படுகின்றன. காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் கூட்டத்தில் கலந்து கொள்வதால், நகரம் முழுவதும் நெரிசல் உச்சத்தை எட்டியுள்ளது.

சாலையின் குறுகிய பரப்பளவு, நெரிசலான வாகன ஓட்டம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கின்மையால் அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகரில் தினமும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், போதுமான போலீஸ் கண்காணிப்பு இல்லையென்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதனிடையே, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலைகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் வைத்தல், ஒழுங்கான வாகன நிறுத்த வசதி, போக்குவரத்து சிக்னல் மற்றும் போலீஸ் கண்காணிப்பு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad