தர்மபுரி, ஜூன் 8:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி பகுதியில், சாலையை கடந்த கூலி தொழிலாளி ஒருவர் சொகுசு கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகமரை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (30) என்பவர், பெங்களூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக திருமணமாகி, மனைவி மணி, மகன் மற்றும் மகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்.
நேற்று தர்மபுரி அருகே எர்ரப்பட்டியில் நடந்த ஒரு உறவினரின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரு நோக்கி செல்லும் வழியில், மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளியில் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, சிறுநீர் கழிக்க சாலை கடந்தார். இந்தநிலையில், எதிரே ஓசூரிலிருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு சொகுசு கார் திடீரென செல்வத்தின் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக