தருமபுரி, ஆடவை (ஆனி) 06-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமாண்கோட்டை ஊராட்சி, தேவரசம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று (20.06.2025) நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, சிறப்பாக கறவை மாடுகள் வளர்த்த விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் 20 பயனாளிகளுக்கு தீவன விதைகள் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 12 முகாம்கள் வீதம், மொத்தமாக 120 சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் கால்நடைகளுக்கான சிகிச்சை, சினை ஆய்வு, குடற்புழு நீக்கம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், கருப்பை மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கால்நடைகளிடமிருந்து இரத்தம், சாணம், பால் மற்றும் தோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
அதற்குப் பிறகு, கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் அசோலா பாசி, தீவன புல்கள், தீவன விதைகள் போன்றவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. சிறந்த கலப்பின கிடாரி கன்றுகளுக்கான பேரணி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு. மரியசுந்தர், பொது மேலாளர் (ஆவின்) திருமதி மாலதி, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் மரு. ரவிச்சந்திரன், உதவி இயக்குநர்கள் மரு. சரவணன், மரு. கனகசபை, கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக