ஒகேனக்கலில் பாதுகாப்பு உபகரணமின்றி பரிசல் சேவையளித்தவர் கைது – சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை, - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

ஒகேனக்கலில் பாதுகாப்பு உபகரணமின்றி பரிசல் சேவையளித்தவர் கைது – சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை,


ஒகேனக்கல், ஜூன் 18-


பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி மற்றும் உரிய அதிகாரப்பூர்வ அனுமதியின்றி பரிசல் சேவையை வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 15, 2025 அன்று மாலை சுமார் 5.00 மணியளவில், ஒகேனக்கல் சின்னாற்று பகுதியில் ஒருவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் பரிசல் சேவையை மேற்கொண்டு வருகிறார் என தகவல் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, குறித்த நபர் திரு. முருகேசன் (த/பெ மாதையன்), ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, 17.06.2025 அன்று காலை 11.00 மணியளவில், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. பின்னர், காவல் துறை அவரை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், எந்தவொரு ஓட்டுநரும் உரிய உரிமம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசல் சேவை மேற்கொள்வதை கடுமையாகத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad