மாரண்டஅள்ளி, ஜூன் 04-
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கடத்திகொள்மேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (56) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி வேலு(37) என்பவருக்கும் வழித்தடம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இது குறித்து நல்லூர் கிராம நிர்வாக அதிகாரி நேற்று முன்தினம் கோவிந்தசாமி தங்கை பூங்கொடியிடம் விசாரணை செய்து சென்றுள்ளார்.
இது குறித்து கோவிந்தசாமி, பூங்கொடி இருவரும் நேற்று முன்தினம் மாலை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வேலு மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவிணர்களான செல்வராஜ் (40) சத்யா (30) ஆகியோர் கோவிந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் வேலு கோவிந்தசாமியை கொடுவாளால் தலையில் வெட்டி உள்ளார். தடுக்க வந்த அவரது மனைவி லதாவையும் கூட இருந்தவர்கள் தாக்கி உள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான செல்வராஜ், சத்யாவை தேடி வருகின்றனர்.