தருமபுரி, ஜூன் 18-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கடந்த 17.06.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தலைமை வகித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்தைக் குறிவைத்து, பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம், இளவயது கர்ப்பம் மற்றும் பள்ளி கல்வியில் இடைச்செருக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மூலமாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிலவரம் மதிப்பீடு செய்யவும், தேவையெனில் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
'போலீஸ் அக்கா' திட்டம், 1098 சைல்ட்லைன் நம்பருக்கான விழிப்புணர்வு, PPO மற்றும் தத்தெடுத்தல் தொடர்பான தகவல் பதாகைகள், மொபைல் போன் அதி பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு, மற்றும் கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி தொடர்கின்றனவா என்ற கண்காணிப்பு ஆகியவை பற்றிய திட்டங்கள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, இளைஞர் நீதிக்குழு தலைவர் திரு. ஏ. தமிழரசு, மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், சமூக நல, சுகாதார, கல்வி, ஊரக வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைகளை பகிர்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக