தருமபுரி, ஜூன் 11 –
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மக்கள் அமைப்புகளுக்கு “மணிமேகலை விருது” வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பன்முக கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சியைச் சேர்ந்த ஸ்ரீசக்தி மகளிர் சிறப்பு சுய உதவிக்குழு, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் மணிமேகலை விருது வழங்கப்பட்டது. மேலும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம், மோளையானூர் ஊராட்சியைச் சேர்ந்த ஜான்சிராணி மகளிர் குழு உறுப்பினர்கள் மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து பரிசு கோப்பையும், பரிசுத் தொகையையும் பெற்றனர்.
இவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி அ. லலிதா, உதவி திட்ட அலுவலர்கள் திரு. கா. முருகேசன், திருமதி இரா. சந்தோசம், திருமதி என். மாலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக