பாலக்கோடு, ஆடவை (ஆனி) 14-
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வட்டம், அமாணிமல்லாபுரம் பனந்தோப்பு கிராமத்தில் உள்ள தனியார் வீட்டில் நுழைந்த நாகபாம்பு பொதுமக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. நேர்த்தியான நடவடிக்கையின் மூலம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் அதனை பாதுகாப்பாக கைப்பற்றி வனப்பகுதியில் விடுவித்தனர்.
இந்நிகழ்வு, பனந்தோப்பைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக் என்பவரது இல்லத்தில் இன்று காலை நடந்தது. சுமார் 5 அடி நீளமுள்ள நாகபாம்பு வீட்டிற்குள் நுழைந்ததை கண்ட குடும்பத்தினர், உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
பாம்பு, வீட்டிற்குள் இருந்த ஒரு சூட்கேசுக்குள் ஒளிந்து கொண்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் — துணை அலுவலர் சண்முகம், வீரர்கள் காளிமுத்து மற்றும் சிவக்குமார் — மிகுந்த கவனத்துடன் சூட்கேசை வெளியே கொண்டு வந்து அதன் உள்ளே இருந்த நாகபாம்பை உயிருக்கு சேதமின்றி மீட்டனர். தொடர்ந்து, வனத்துறை விதிகளின்படி பாம்பு பாதுகாப்பாக அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.