தருமபுரி, ஜூன் 5-
தருமபுரி மாவட்டத்தில் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தனர். பின்னர் அவர் தூய்மை இயக்க உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிக்கு தொடக்கம் வைத்தார். மேலும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் 30 சிறு ஏரிகளை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மேலும் 60 ஏரிகள் சேர்த்து மொத்தம் 90 ஏரிகள் தூர்வாரப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி சந்தைபேட்டை பகுதியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சுரந்த நாய்கள் பிடிக்கும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவையற்ற பொருட்கள் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சிவாடி HPCL நிறுவன வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், “சுற்றுச்சூழலை பாதுகாக்க எனது தினசரி வாழ்க்கையில் சாத்தியமான அனைத்து மாற்றங்களையும் செய்வேன்” என உறுதி மொழி ஏற்றார்.
இந்நிகழ்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, உதவி இயக்குநர் திரு. நிர்மல் ரவிகுமார், நகர மன்ற தலைவர் திருமதி இலட்சுமி நாட்டான் மாது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக