பாலக்கோடு, ஆடவை (ஆனி) 14-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில், ஒரு பெண் சிறுத்தை ஊருக்குள் புகுந்து உணவிற்காக சேவலை வேட்டையாடி சென்ற சம்பவம் மக்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகம் என்பவர் வீட்டின் முன்பாக இருந்த சேவலை நேற்று விடியற்காலை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. பின்னர் சிசிடிவி காட்சிகளில் பார்த்தபோது, சுமார் 3 வயதுள்ள பெண் சிறுத்தை ஒன்று வீட்டு முற்றத்தில் நடமாடி, மேல் பகுதியில் அமர்ந்திருந்த சேவலை வேட்டையாடி செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது.
இது மட்டுமல்லாது, இதற்கு முன் ஒரு நாய், ஒரு கோழி இவ்வீட்டிலிருந்து சிறுத்தைக்கு இரையாகியுள்ளன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த வன விலங்கு தாக்குதல்கள் விநாயகத்தின் குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கவாசிகளிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாலக்கோடு வனத்துறையினர், குடியிருப்பு பகுதிகளில் வருவதை கண்காணித்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அதை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.