தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரண்டஅள்ளி அருகே உள்ள அமானிமல்லாபுரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சேரன் (21), பாலக்கோடு புளியூர் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல், கெண்டேயனஅள்ளியைச் சேர்ந்த திரிஷா (20), நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
இருவரும் பள்ளிக் காலம் முதல் காதலித்து வந்த நிலையில், சமூகப் பின்னணியின் வேறுபாடு காரணமாக பெற்றோர் காதலை எதிர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 6ஆம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு நண்பரின் வீட்டில் தங்கி இருந்த இவர்கள், பெற்றோர் தேடிவரும் நிலையில் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் வந்து பாதுகாப்பு கோரினர். போலீசார் உடனடியாக இருவரின் பெற்றோர்களையும் அழைத்து தகவல் தெரிவித்தனர். திரிஷாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்தனர். ஆனால் திரிஷா உறுதியாக சேரனுடன் தான் வாழ விரும்புவதாகத் தெரிவித்ததால், போலீசார் இருவரையும் அனுமதித்து அனுப்பினர். இச்சம்பவம் மாரண்டஅள்ளி மற்றும் சுற்றுப்பகுதியில் பெரும் கவனம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக