தருமபுரி மாவட்டத்தில் ரூ.19.46 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

தருமபுரி மாவட்டத்தில் ரூ.19.46 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.


தருமபுரி, ஜூன் 04-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் போடூர் ஊராட்சியில், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.19.46 கோடி மதிப்பில் நடைபெறும் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் மேல் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 04.06.2025 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


அன்று பணிகள் நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பொறுப்புள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பென்னாகரம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில், KNMT - கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வார சந்தை கட்டிட பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்தார்.


மேலும், மாங்கரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அடிப்படை வசதிகள், திட்டப்பணிகள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளை நேரில் சந்தித்து, நிலவரத்தை கேட்டறிந்தார்.


இந்த ஆய்வில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. கணேசன், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. மணிவண்ணன், திரு. லோகநாதன், பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு. செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad