தருமபுரி, ஜூன் 04-
தருமபுரி மாவட்டத்தில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் உபஇயக்கத் திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பவர் டில்லர் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவிகள் (Power Weeder) மானியத்தில் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த திட்டம், விவசாயத் துறையில் வேலையாட்கள் பற்றாக்குறையை குறைத்து, குறுகிய காலத்துக்குள் பயிர் சாகுபடிக்கு உதவுகிறது. இதன் மூலம், தருமபுரி மாவட்டத்திற்கு பின்வரும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன: 11 குதிரைத் திறன்(Hp) மேலான பவர் டில்லர் – 40, 2-5 Hp விசை கருவி – 2, 5-7.5 Hp விசை கருவி – 88, 7.5 Hp மேலான விசை கருவி – 5 என குறிப்பிடப்பட்டுள்ளன.
மானிய அளவு சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% வரை (அதிகபட்ச தொகை வரம்புடன்) வழங்கப்படுவதுடன், மேலும் 20% கூடுதல் மானியம் கிடைக்கும். பொதுப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 40% வரை அல்லது நியமிக்கப்பட்ட அதிகபட்ச தொகை அளவிற்கு மானியம் வழங்கப்படும். நெல் நாற்று நடும் இயந்திரம் மற்றும் களை எடுக்கும் கருவிக்கு, பொதுப் பிரிவினருக்கு கூடுதல் 10% மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களுடைய பங்களிப்பு தொகையை RTGS/NEFT அல்லது வங்கி வரைவோலை மூலமாகச் செலுத்தி, உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இயந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்டத்திலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்கள் அல்லது வட்டார வேளாண் அலுவலர்களை அணுகலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் அரூர் விற்பனை கூட வளாகங்களில் உள்ள உதவி செயற்பொறியாளர்களின் தொலைபேசி எண்கள் முறையே 04342-296132 மற்றும் 04346-296077 என்பவை. இந்த வாய்ப்பினை பயனுள்ளதாக பயன்படுத்தி, உங்கள் விவசாய உற்பத்தியை மேம்படுத்துங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக