தருமபுரி, ஜூன் 19-
தருமபுரி மாவட்டத்தில் கலப்பட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, தனியார் வெல்ல ஆலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வரையறை பகுதிக்குள் செயல்பட்டு வரும் தனியார் வெல்ல ஆலைகளில் கலப்பட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வரப்பெற்றது. இதனைத் தொடர்ந்து தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் நல்லம்பள்ளி வட்டாரங்களில் இயங்கி வரும் வெல்ல ஆலைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் கரும்புத்துறை அலுவலர்களுடன் இணைந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின்போது கலப்படத்திற்காக வைத்திருந்த வெள்ளை சர்க்கரை 30 மூட்டைகள் மற்றும் 10x10 கிராம் செயற்கை நிற வண்ணப்பொடிகள் போன்றவை கண்டறியப்பட்டு அதிகாரிகளால் உடனடியாக கைப்பற்றப்பட்டது. இந்த தலையீடுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட வெல்ல ஆலைகளின் மீது மாவட்ட வருவாய் அலுவலர் / நீதிவழி தீர்வு அலுவலர் வழியாக நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம், 2006-ன் அடிப்படையில், கலப்பட உணவுப் பொருள் தயாரிக்கும் தனியார் வெல்ல ஆலைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மக்கள் நலனை பாதிக்கும் எந்தவொரு செயல்பாடும் சகிக்கப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக