தருமபுரி, மே 23-
தமிழக அரசின் “படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (UYEGP – Unemployed Youth Employment Generation Program) என்பது, வணிக சார்ந்த தொழில்களைத் துவங்கி முன்னேறும் நோக்கத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைகிறது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற முடியும். அதற்காக அரசு 25% மானியமாக அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வழங்குகிறது. திட்டத்துக்குத் தகுதியானவராக இருக்க குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு கல்வித் தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வரை; சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்) 55 வயது வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள தொழில் முனைவோர், தருமபுரி மாவட்ட SIDCO தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ அல்லது www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மளிகை கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷனரி கடை, மொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் விற்பனை ஆகியவைகளைத் தவிர்த்து அரசு தடை செய்த பொருட்கள் தவிர மற்ற தொழில்கள் அனைத்தையும் தொடங்குவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொள்வதோடு, 8925533941, 8925533942 மற்றும் 04342-230892 என்ற எண்களில் தொடர்புகொண்டு வழிகாட்டல்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக