இந்தக் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ள ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், சிறப்பு நிதியுதவி, குடிநீர் இணைப்பு, வீட்டுவரிச்சலுகை, இலவச காதுக்கேட்கும் கருவி, கண்கண்ணாடி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார்கள்.
மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு நடத்தி, தகுதியான விண்ணப்பங்களுக்கு விரைந்து தீர்வு வழங்கும் வகையில் மாவட்டத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் உரிய உத்தரவுகளை வழங்கினார். மேலும், மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி, இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பெற்ற 4 முன்னாள் படைவீரர்களின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், 5 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண்கண்ணாடிகள் வழங்கும் ஆணைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் (பொ) திருமதி எஸ். பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் நலன் குறித்த நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்லும் இப்பயணம் அனைவராலும் பாராட்டப்பட்டது.