நல்லம்பள்ளியில் தெருக்கூத்து நிகழ்வுகள் மூலம் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

நல்லம்பள்ளியில் தெருக்கூத்து நிகழ்வுகள் மூலம் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பாக, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தர்மபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி கலை அரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்வில் கல்வியியல் கல்லூரி முதல்வர் திருமதி ஷாஹின் பானு வரவேற்புரையும், திரு. கௌரி சங்கர் முன்னுரை உரையும் வழங்கினர். நிகழ்வை கல்லூரி தாளாளர்கள் திரு. டி.என்.சி. மணிவண்ணன், திருமதி செல்வி மணிவண்ணன் ஒருங்கிணைத்தனர். நிர்வாக இயக்குநர் திரு. விக்ரமன் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானு சுஜாதா, ஒன்றிய அலுவலர்கள் நந்தகோபால், குமணன், திருப்பதி, சரண், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். சிறுதானிய விழிப்புணர்வுக்காக, 'பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையம்' சார்பில் கலைக்குழு கமலக்கண்ணன் தலைமையில், தாரைத்தம்பட்டைக் கரகாட்டம், ஒயிலாட்டம், மற்றும் தெருக்கூத்து, நுக்கட் நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் கலை நயத்துடன் அரங்கேற்றப்பட்டன.


கலை நிகழ்வுகள் மூலம், கம்பு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டது.


மருத்துவர் பானு சுஜாதா, தங்களது உரையில்,

நாம் தினமும் எதாவது ஒரு வேளையில் சிறுதானியங்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சிறுநீரக கோளாறு, இரத்த சோகை, மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல் போன்றவையிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக பெண்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இது மிகவும் பயனளிக்கிறது” என்றார்.


நிகழ்ச்சியின் இறுதியில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் நன்றி உரையாற்றினார். மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad