பாலக்கோடு, மே 08:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அக்ரகாரத் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பாலக்கோடு வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். (NMMS – National Means-cum-Merit Scholarship) திட்டத்தில் 2024-2025ம் கல்வியாண்டுக்கான தேர்வில் வெற்றி பெற்றதை முன்னிட்டு, பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழா, வட்டார கல்வி அலுவலர் அன்புவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்வில் வெற்றி பெற்ற 20 மாணவ-மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி வழங்கிய தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் சிறப்புரையாற்றி கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கியபோது, என்.எம்.எம்.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் +2 வரை கல்வி பயிலும் காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையை பெறுவார்கள் எனவும், இந்த உதவியினால் மாணவர்கள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கவேல் மற்றும் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகமும் ஊக்கத்தையும் வழங்கினர். நிகழ்ச்சி இறுதியில், அக்ரகாரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்நாதன் நன்றியுரை நிகழ்த்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக