தருமபுரி, மே 15:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு கடனுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் நோக்கத்துடன் தனிநபர் கடன், சுய உதவி குழுக் கடன், கைவினை கலைஞர்களுக்கான “விராசாத்” கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன.
திட்டம் 1-ன் கீழ், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு உட்பட்ட சிறுபான்மையினர் ஆண்டுக்கு 6% வட்டியுடன் ரூ.20 லட்சம் வரை தனிநபர் கடனும், 3% வட்டியுடன் ரூ.20 லட்சம் வரை கல்விக்கடனும் பெறலாம். அதேபோல், கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியுடன் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ், வருட வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள சிறுபான்மையினர் ரூ.30 லட்சம் வரை தனிநபர் கடனையும், மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவியருக்கு 5% வட்டியில் கல்விக்கடனையும் பெறலாம். சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன், ஆண்களுக்கு 10% மற்றும் பெண்களுக்கு 8% வட்டியில் வழங்கப்படும்.
இக்கடன்கள் மூலமாக சிறுபான்மையினர் தங்களது தொழில்கள் மற்றும் கல்வி முயற்சிகளில் நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, கைவினை கலைஞர்களுக்கான “விராசாத்” திட்டம் மூலம் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க தேவையான நிதியுதவி பெறுவது சாத்தியமாகின்றது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின்கள் போன்ற சிறுபான்மையினர், தங்களுக்கான உரிமைகளை உணர்ந்து இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டார்.
இந்த திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகங்களில் கிடைக்கின்றன. தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக