Type Here to Get Search Results !

வள்ளல் அதியமான் பிறந்த நாள் அரசு விழா – தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சித்ரா பவுர்ணமி – வள்ளல் அதியமான் பிறந்த நாள் அரசு விழா இன்று (12.05.2025) சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் சங்கக் காலப் புலவர் ஒளவையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அவர்களின் வரலாற்றுப் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை திறந்து வைத்து, அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும், வள்ளல் அதியமான் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் குறும்படத்தையும் காணொலி வடிவில் பார்த்து பாராட்டினார்.


இந்த விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, வள்ளல் அதியமான் மற்றும் ஒளவையார் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் விழாவில் உரையாற்றும்போது கூறியதாவது:

"தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்மொழிக்காக வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்த தமிழறிஞர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்தலைவர்கள் ஆகியோரின் பிறந்தநாள்களில் அரசு விழா நிகழ்ச்சிகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், வள்ளல் அதியமான் பிறந்த நாளான சித்ரா பவுர்ணமி தினம் அரசு விழாவாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடத்தப்படுகிறது."

 

"வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க காலத்து ஏழு வள்ளல்களில் ஒருவர். தகடூரை (தற்போதைய தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். இவரது வீரமும், தீவிர தமிழ்ப்பற்றும், மக்களுக்காகச் செய்த தொண்டுகளும் இன்றும் போற்றப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்களில் இவரைப் பற்றிய பல சிறப்பான குறிப்புகள் உள்ளன."

 

"சிறந்த அரசியலாளராக, மக்களுக்காக பல நன்மைகள் செய்த தலைவர் வள்ளல் அதியமான், ஒளவையாரை ஆளாக மதித்து, அவருக்கு நெல்லிக்கனி அளித்த தியாக சிந்தனையாளர் என்பது தமிழரசின் பெருமை."


செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் 2006-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2 ஏக்கர் நிலப்பரப்பில் 6,190 சதுரஅடி கட்டட பரப்பளவில் 400 பேர் அமரக்கூடிய பார்வையாளர் மண்டபத்துடன் அமைக்கப்பட்டது. மண்டபத்தின் வெளிப்புறத்தில் வள்ளல் அதியமான் மற்றும் ஒளவையார் ஆகியோரின் வெண்கலத் திருஉருவ சிலைகள் நிறுவப்பட்டு, 28.02.2009 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தற்போது, வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் வரலாற்று புகைப்படங்களை அடங்கிய புதிய பதாகைகள் திறக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் திரு. இராஜாங்கம், இ.வ.ப, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கேத்தரின் சரண்யா, இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம்.பெ.சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஜோதிசந்திரா, உதவி ஆணையர் (கலால்) திருமதி. நர்மதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, பொதுமேலாளர் ஆவின் திருமதி. மாலதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, மற்றும் அரசு துறை தலைமை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


இவ்வாறு, தமிழ் மரபும், வீரமும், மொழிப்பற்றும் கொண்ட வள்ளலின் புகழை நாடும் நம் தலைமுறை, பல்லாண்டுகள் போற்றும் வகையில் அரசு விழா சிறப்பாக நடந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies