
தருமபுரி, மே 20-
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் 1336 குழந்தைகள் மையங்களில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன், சத்துமாவு மற்றும் ஊட்டச்சத்துள்ள கலவை உணவு, முன்பருவக் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையங்களில் முறைசாரா முன்பருவக் கல்வி பாடல்கள், கதைகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளின் உடல், மொழி, மன, சமூக மற்றும் அறிவு வளர்ச்சியை உறுதி செய்வதாகும். இதற்காக "ஆடிப்பாடி விளையாடு பாப்பா" எனும் சிறப்பு பாடத்திட்டம், 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளியில் சேர உளவளத்துடனும் உடல் தயாரிப்புடனும் தயாராகும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று, குழந்தைகளை மையங்களில் சேர்க்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் 2025 மாதத்தில் தவறாமல் குழந்தைகள் மையங்களில் சேர்க்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் சேவையும் மையங்களில் நடைபெற்றுவருவதால், அந்த வசதியையும் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக