க.ஈச்சம்பாடி அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

க.ஈச்சம்பாடி அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு.


கம்பைநல்லூர், மே 19-

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் க.ஈச்சம்பாடி கிராம எல்லையில் அமைந்துள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீர் வெளியேறி வருவதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.05.2025) நேரில் சென்று அணைக்கட்டினை முழுமையாக ஆய்வு செய்தார்.


தமிழ்நாட்டில் கோடைகாலத்தை தொடர்ந்து ஏற்பட்ட பரவலான மழையால் பல்வேறு அணைகள், தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில் கிருஷ்ணகிரி அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், உபரி நீராக 2,124 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈச்சம்பாடி அணைக்கட்டில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.


அணைக்கட்டின் தற்போதைய நிலையை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நீர் வரத்து, வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். மேலும், இதற்கிடையே தென்பெண்ணையாறு கரையோர கிராமங்களான இருமத்தூர், க.ஈச்சம்பாடி, அனுமந்தீர்த்தம், தாம்பல் மற்றும் அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.


நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அணையின் நீர் நிலை மற்றும் உறுதித்தன்மையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு. ஆறுமுகம், உதவி பொறியாளர் திரு. பிரபு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad