தருமபுரி மாவட்டம், பொ.துரிஞ்சிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற வடசெந்தூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் செல்வன் இ.உம்மர், இன்று (16.05.2025) வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 397 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் மாணவனை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு 87.58% தேர்ச்சியுடன் மாநில அளவில் 27வது இடத்தில் இருந்த தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகள், இந்தாண்டு 95.13% தேர்ச்சியுடன் 7வது இடத்திற்கு முன்னேறி, சாதனையுடன் விளங்கியுள்ளது. இது தவிர, மாநில அளவில் தருமபுரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் 96.31% தேர்ச்சி பெற்றுள்ளதுடன், மாநிலத்தில் 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவன் இ.உம்மர் – இரு கால்களிலும், கைகளிலும் உள்ள உடற்குறைபாட்டை மீறி, கடும் முயற்சியின் மூலம் தேர்வில் சிறப்பித்துள்ளார். தமிழ் – 62, ஆங்கிலம் – 70, கணிதம் – 92, அறிவியல் – 85, சமூக அறிவியல் – 88 என மொத்தமாக 397 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவனை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவரை மனமுவந்துப் பாராட்டியதுடன், அவரின் கல்வி கனவுகளைப் பூர்த்தி செய்ய அனைத்து உதவிகளும் தரப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக