பாலக்கோடு, மே 12:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதூர் பொன் மாரியம்மன் கோயில் வளாகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மகாபாரத சொற்பொழிவும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் துரியோதனன் படுகள நிகழ்ச்சியும், இந்த ஆண்டும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான வருகையுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பக்தர்களின் நம்பிக்கையின்படி, இந்த நிகழ்வுகள் தீமையை அழித்து நல்லதை நிலைநிறுத்த, விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி மக்கள் ஆரோக்கியமாக வாழவும் திரெளபதி அம்மனின் அருளால் நடக்கின்றன என ஐதீகம் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன் மாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கடந்த 25ம் தேதி முதல் இரவு நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு தொடங்கப்பட்டு, அதில் விவரிக்கப்படும் கதைகளுக்கு ஏற்ப நாடக கலைஞர்கள் நடத்திய நாடகங்கள் பகல் நேரங்களில் நடைபெற்றன. பாரத யுத்தத்தின் 18வது நாளில் பீமன் துரியோதனனை வீழ்த்தும் பிரமாண்டமான "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆன்மிக களிப்புடன் வழிபாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு மற்றும் ஸ்ரீ பச்சியம்மன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக தலைவர் பெருமாள், கெளரவ தலைவர் ராஜா, துணைத் தலைவர் முத்துராஜ், செயலாளர் ரவிகிட்ராயர், பொருளாளர் முனியப்பன், பச்சியப்பன், முன்னாள் ஊர் கவுண்டர் சண்முகம் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக