தருமபுரி, 28 ஏப்ரல் 2025:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (28.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து சேவை, பட்டா வழங்கல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல், வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக மொத்தம் 680 மனுக்கள் பெறப்பட்டன.
மாநில முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் குறிப்பிட்டார். இதையடுத்து, பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இத்தோடு, இக்கூட்டத்தின் போது தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 2022 ஆம் ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் சாதனை புரிந்த 2 மாவட்ட அலுவலர்களுக்கு, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தலா 30 கிராம் வெள்ளிப் பதக்கங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) திருமதி பிரேமா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக