தருமபுரி – ஏப்ரல் 7:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரூர் வட்டம் காரப்பாடியைச் சேர்ந்த வள்ளிமதுரை அரசு நடுநிலைப்பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி சந்தியா, கண்புரை சிகிச்சைக்கு பிறகு மீள் பார்வை பெறக் காரணமான "முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கண்ணொளி திட்டம்" பயனாளியாக சமூகத்தின் கவனத்தை பெற்றார். மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் இலவச கண்கண்ணாடி வழங்கி, கல்வியில் முன்னேற வேண்டிய ஆலோசனைகளை வழங்கினார்.
மொத்தம் 808 மனுக்கள் இக்கூட்டத்தில் பெறப்பட்டன. அவை சாலை வசதி, குடிநீர், பேருந்து வசதி, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீடுமனை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியவையாக இருந்தன. மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.17,000 மதிப்பில் கல்வி மற்றும் திருமண உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் “தமிழ்ச்செம்மல் விருது” பெற்ற திரு. மா.சென்றாயன் அவர்களுக்கு அரசாணை, விருதுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. அதேபோல், வேடகட்டமடுவு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு. இசையரசனுக்கு ரூ.27,600 மதிப்பிலான நவீன வாசிக்கும் கருவி, ப்ரெய்லி கைகடிகாரம், ஊன்றுகோல், கண்ணாடி ஆகியவை வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கே. சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி செண்பகவள்ளி, ஓய்வுபெற்ற கண் மருத்துவர் கு. கலையரசன் மற்றும் பிற அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டம் பொதுமக்களின் நலனைக் கருதி அரசு எடுக்கும் நேரடி நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக