தர்மபுரி மாவட்டம் ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் அநாகரிகமாக பேசிய லேப் டெக்னீசியன் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுவட்டார பகுதிகளான பொம்மனூர், மகேந்திரமங்கலம், சீங்கேரி, பந்தாரஹள்ளி, கொல்லப்பட்டி, வெள்ளிச்சந்தை, சூடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் தினசரி மருத்துவ சேவைக்காக வரக்கூடிய முக்கியமான இடமாக இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வாரத்திற்கு ஒருமுறை பரிசோதனைக்காக இங்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்த போது, அங்கு பணியில் இருந்த லேப் டெக்னீசியன் வினோத்குமார், அப்பெண்ணிடம் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கர்ப்பிணி, கண்ணீருடன் தன் தந்தையிடம் இவ்விஷயத்தை தெரிவித்தார்.
தகவலறிந்த முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், லேப் டெக்னீசியனிடம் இது குறித்து கேட்டபோது, அவரும் தரக்குறைவாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளுடன் சில பணியாளர்கள் முறையான நடத்தை பின்பற்றாமல் பேசிவருவதாக புகார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வட்டார மருத்துவ அலுவலர், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, நோயாளிகள் சமாதானம் அடைந்தனர்.
தமிழ்நாடு அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சில ஊழியர்களின் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக